Saturday, April 2, 2011

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் அறிக்கை



தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை  வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில் கூறியுள்ள வாக்குறுதிகள்:

* இளைஞர்களின் எதிர் காலம் கருதி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

* வேலை இல்லா காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்க கட்சி வற்புறுத்தும்.

* சிறு வணிகத்தில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதை தடுக்க போராடுவோம்.

* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்.

* ரேசன் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலையில் வழங்க வேண்டும்.

* அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். இலவச மின்சாரம் கேட்கும் தகுதியுடைய அனைவருக்கும் மின் இணைப்பு கிடைக்க போராடுவோம்.

* தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து மாற்று ஆட்சியை கொண்டு வருவதன் மூலமே மக்கள் நலன்களை பாதுகாக்க முடியும் உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

* விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும். குறிப்பாக, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,000 என்ற விலையில் கொள்முதல் செய்ய வேண்டி கட்சி போராடும்.

* அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் பொது விநியோக முறையில், நியாயமான விலையில் அனைவருக்கும் கிடைத்திடவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் தலா 35 கிலோ அரிசி வழங்கிடவும், உணவுப் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.

* மின் தடையை அறவே ரத்து செய்திடவும், புதிய மின் திட்டங்கள் கொண்டு வரவும் கட்சி பாடுபடும். இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்துள்ள தகுதியுடைய அனைவருக்கும் உடனுக்குடன் மின் இணைப்பு கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

* சீரழிந்து வரும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், கிரிமினல்மயமாகி வரும் அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராடுவோம்.

நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அமலாக்கவும், நிலக் குவியலை முடிவுக்குக் கொண்டு வரவும், மிச்ச நிலங்களையும், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களையும், நிலமற்ற ஏழை, தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் கட்சி குரல் கொடுக்கும்.

தேசிய வேலை உறுதிச் சட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தவும், ஆண்டில் 150 நாள்கள் வேலை வழங்கிடவும், குறைந்தபட்ச தினக்கூலி ரூ.200 வழங்கிடவும் கட்சி பாடுபடும்.

அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், தாற்காலிகம், ஒப்பந்தம் என்ற அடிப்படையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பணி வரன்முறையுடன், வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடைக்க கட்சி போராடும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு மாநில சுயாட்சி வழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி உரிய தலையீடுகளை செய்யும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும்.

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கிடைத்திட கட்சி பாடுபடும்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் கிடைத்திடவும், கல்லூரிக் கல்வி வரை அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் இலவசக் கல்வி கிடைத்திடவும், கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

சுய உதவிக் குழு பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் கடனுதவி கிடைக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கவும் கட்சி போராடும். காவல் துறை சீர்திருத்தத்துக்கு கட்சி குரல் கொடுக்கும்.

சுயேச்சையான அமைப்பு மூலம் கூட்டுறவுத் தேர்தலை முறையாகவும், ஜனநாயக ரீதியாகவும், உடனடியாகவும் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி போராடும். உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை வலுப்படுத்தவும், மாநில அரசின் மொத்த வருவாயில் 30 சதவீதத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்கிடவும் கட்சி பாடுபடும்.

சட்டப்பேரவை ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சட்டப்பேரவை கூடும் நாள்களை அதிகப்படுத்தவும், அங்கு மக்கள் பிரச்னைகள் உரிய முக்கியத்துவத்துடன் விவாதிக்கப்படவும், எதிர்க்கட்சிகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கிடவும் கட்சி குரல் கொடுக்கும்.

பொது வாழ்வில் மக்கள் நலனுக்கே முன்னுரிமை அளித்து, அர்ப்பணிப்பும், நேர்மையும், தூய்மையும் நிறைந்த அரசியல் பண்பாட்டை உறுதியாக கடைப்பிடித்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதாரம் உள்பட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. எங்கள் பிரசாரமும் தொடங்கி விட்டது. அகில இந்திய நிர்வாகிகளான பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரும் பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட கலைக்குழுவும் பிரசாரத்தில் ஈடுபடுகிறது.

திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை இந்த தேர்தலில் நாங்கள் அனுமதிக்க மாட்டடீம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற பணப் பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் போலீஸ் எஸ்கார் வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வருகிறது. இதையும் தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூர், தஞ்சை, திருச்சி பொதுக் கூட்டங்களில் பேசி உள்ளார். ஒரு இடத்தில் கூட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. விலைவாசி உயர்வு, ஊழலை ஒழிப்பது, மின்வெட்டுக்கு தீர்வு குறித்து பேசவில்லை. தேர்தல் ஆணையத்தைப் பற்றித்தான் கடுமையாகச் சாடியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

234 தொகுதியிலும் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 29, 2011

10 கிராம் நகையும் அஞ்சலக சேமிப்பும்! 10 வருடம் எம்.எல்.ஏ




கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலபாரதியின் சொத்து 10 கிராம் நகையும், அஞ்சலகச் சேமிப்புமாக ரூ.1 லட்சம் மட்டுமே. 

திண்டுக்கல் ஸ்டேட் பாங்க் (மெயின்)கில் ரூ.3,170ம், சென்னை அண்ணா நகர் இந்தியன் வங்கியில் ரூ.38ம் பணம் வைத்துள்ளார். வேட்புமனுத் தாக்கலை தொடர்ந்து, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்பேரில் திண்டுக்கல் நேருஜி நகர் இந்தியன் வங்கியில் ரூ.1000 கட்டியுள்ளார். 

தனது ஊரான கதிரணம்பட்டி அருகேயுள்ள ரெட்டியார் சத்திரம் அஞ்சலகத்தில் சிறு சேமிப்பில் ரூ.42,472ம், தொடர் வைப்பு நிதியில் ரூ.43 ஆயிரமும் வைத்துள்ளார். கட்சியில் கொடுக்கும் ஊதியத்தைக் கொண்டு மாதா மாதம் கடந்த பல வருடங்களாக சேமித்த தொகைதான் இந்த 85,472 ரூபாய் ஆகும். 

மேலும் நகைகளாக 2 கிராம் தோடு, 8 கிராம் செயின் வைத்துள்ளார். இந்த 10 கிராம் நகையும் கடந்த 10 வருடங்களாக அவர் வைத்துள்ள நகைதான். கடந்த தேர்தலின் போதும் இந்த நகைகளை கணக்கில் காட்டினார். அன்றைக்கு 2 கிராம் தோடுக்கு ரூ.1200 விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதன் இன்றைய மதிப்பாக ரூ.3950 காட்டப்பட்டுள்ளது. இதே போல் 8 கிராம் செயினுக்கு ரூ.6400 அன்றைய மதிப்பு. அந்த செயினுக்கு இன்றைய மதிப்பு ரூ.15,600 காட்டப்பட்டுள்ளது. 

ஆக மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து230 ரூபாய் 96 பைசாதான் அவரது சொத்து மதிப்பு. கையிருப்பு ஏதும் இல்லாமல் போட்டியிடுகிறார். வேட்புமனுத்தாக்கலின்போது அவர் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை பார்த்து கையிருப்பே இல்லாத வேட்பாளர் கே.பாலபாரதி என பத்திரிகைகள் எழுதின. 

எதிரணியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பால்பாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் இந்த முறையும் போட்டியிடுகிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற சொற்களுக்கு சொந்தக்காரர்கள் மார்க்சிஸ்ட்டுகள் என்பதற்கு ஓர் இலக்கணமாக உள்ளார் கே.பாலபாரதி. 

- இலமு, திண்டுக்கல் 
நன்றி: தீக்கதிர்

Thursday, January 20, 2011

தோழர் பாப்பா புரட்சிகர பெண் போராளி


தோழர் பாப்பா உமாநாத் புரட்சிகர கம்யூனிஸ்ட்; உத்வேகம் ஊட்டக்கூடிய வீரம் மிக்க தலைவர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்; அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் தனது 81வது வயதில் திருச்சியில் டிசம்பர் 17ம் தேதி காலமானார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு துணைவராக, சக தோழராக பயணித்த தோழர் ஆர்.உமாநாத் உடல் நலிவுற்றிருந்த போதும், உள்ள உறுதியோடு முஷ்டி உயர்த்தி அவருக்கு செவ்வணக்கம் செலுத்தினார்.

ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண் களும் அந்த மகத்தான தலைவருக்கு பிரியா விடை கொடுக்க வந்திருந்தனர். அவர்களால் கண்ணீரை அடக்க முடிய வில்லை.

தோழர். பாப்பா தனது 11வது வயதில் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தனது அரசியல் வாழ்வை துவக்கி னார். 1946ஆம் ஆண்டு நடைபெற்ற வர லாற்றுச் சிறப்பு மிக்க ரயில்வே தொழிலாளர் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே தொழிலாளர் கள் ஐவர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களுக்கான நினைவுச்சின் னம் பொன்மலையில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் தான் தோழர். பாப்பா போலீசாரின் லத்திக் கம்பு தாக்குதலுக்கு முதன் முதலாக இலக்கானார். உழைக்கும் வர்க்க குடும்பத்தின் உன்னத புதல்வியான அவரது இறுதிப்பயணம் அதே மண்ணில் வந்து முடிவடைந்தது.

அந்த வீரம் செறிந்த மண்ணிலேதான் அவரது அரசியல் வாழ்வு பிறந்தது. அது முதல் அவர் தனது கடைசி மூச்சுவரை உழைக்கும் வர்க்க லட்சியங்களுக்கு உண் மையானவராக செயல்பட்டார். என்றென்றும் வீர உணர்வு ஊட்டுகின்ற பொன்மலை மண்ணில் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது. அவரது வர்க்க அர்ப்பணிப்பின் சாட்சியமாக அமைந்தது.

அவரது 70 ஆண்டு பொதுவாழ்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்ற நிகழ்வு களையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களையும் அவர் கண்டார். 1945ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பின ரான அவர், குழந்தைப் பருவத்திலேயே தேசிய இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற் றார். பாப்பா எட்டாம் வகுப்பு வரைதான் பள் ளிப்படிப்பைத் தொடர முடிந்தது. அதற்கு மேல் படிக்க வைக்க அவரது விதவைத் தாயாரால் முடியவில்லை. தான் பெற்ற கல்வி என்பது புத்தகங்களிலிருந்து அல்ல, மாறாக, கண்ணியமான வாழ்க்கைக்காக நாள்தோறும் நடைபெற்று வந்த தொழிலா ளர்களின் போராட்டங்களிலிருந்தே பெற்ற தாக தோழர் பாப்பா அடிக்கடி கூறுவார்.

அவர் பிறந்த சூழ்நிலை, மிகவும் தைரிய சாலியான அவரது தாய் அலமேலு தன்னு டைய அரசியல் பணிகளிடையே அவரை உறுதிமிக்க பெண்ணாக வளர்த்த விதம், செங்கொடி இயக்கத்தின் உணர்வுபூர்வ மான வீராங்கனையாக அவரை வளர்த் தெடுத்தது.

பாப்பா மிகவும் உறுதிமிக்கவர். சுதந்திர போராட்ட காலத்திலும், சுதந்திர இந்தியாவி லும் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை அவர் சிறைசென்றுள்ளார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி இரண் டாகப் பிரிந்த சமயத்தில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இந்திய - சீன யுத்தம் நடைபெற்ற சமயத்திலும், இந் திய பாகிஸ்தான் போரின் போதும் அவர் கைது செய்யப்பட்டார். பொன்மலையில் பிரிட் டிஷாருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் நடைபெற்ற சமயத்தில் அவர் அதில் கலந்துகொண்டார் என்பதற்காக அவரது 12 வயதில் முதன்முறையாக கைது செய்யப்பட் டார். அவர் இளம் வயதினராக இருந்ததால் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப் பட்டார்.

1946இல் தொழிலாளர் வேலைநிறுத்தத் தின்போது பாப்பா உறுதியாகச் செயல்பட் டார், தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப் பாக்கிச் சூட்டில் ஐந்து தொழிலாளர்கள் கொல் லப்பட்டதை அவர் கண்ணால் கண்டார்.

1948ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து கம்யூ னிஸ்ட்டுகள் மற்றும் தொழிற்சங்க இயக்கங் கள் மீது மீண்டும் அடக்குமுறை ஏவப்பட்டது. பாப்பாவும் அவர் தாயாரும் சென்னையில் இருந்த தலைமறைவு தோழர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கேதான் தோழர் உமாநாத்தை பாப்பா சந்தித்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் கள் திருமணம் செய்து கொண்டனர்.

சென்னையில் செயல்பட்ட தலைமறைவு யைத்திற்கு உதவச்சென்ற இந்தக் காலம் அவரது வாழ்வில் சோதனைமிக்க காலமாக அமைந்தது. காவல்துறையினர் தலை மறைவு மையத்தை சோதனை செய்தனர். சில தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். பாப்பாவும் அவர் தாயாரும் பல்லாவரம் காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். கைதாகாத தோழர்கள் குறித்து தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக, காவல்துறையினர் பாப்பாவை அடித்து நொறுக்கினர். அவரும் அவர் தாயாரும் சைதாப்பேட்டை கிளைச் சிறைக்கு அனுப்பப் பட்டனர். அங்கு நிகழ்ந்த கடுமையான சித்ர வதை கொடுமை தாங்காமல் பாப்பா அங்கி ருந்த ஒரு மண் சட்டியை எடுத்து உயர் அதி காரி ஒருவர் மீது எறிந்தார். இதனால் பாப்பா மீது மேலும் கடுமையான அடிகள் விழுந்தன. அப்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் பல ஆண்டுகள் இருந்தன. காவல்துறையினரின் சித்ர வதைகளுக்கு எதிராக பாப்பாவும், அவர் தாயாரும் தோழர் உமாநாத்துடன் சேர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டனர். 22 நாட்கள் வரை உண்ணா விரதம் நீடித்தது. பாப்பாவை அவரது தாயி டமிருந்து பிரித்தனர். அவரது தாயாரின் நிலை மேலும் மோசமானது. பின்னர் சிறை யிலேயே அவர் மரணமடைந்தார். மரணம் அடைந்த தகவல் ஒரு சிறைக்காவலர் மூலம் பாப்பாவிற்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அவர், இறந்த தன் தாயாரைப் பார்க்க அனு மதிக்கப்படவில்லை. பாப்பா, தன் தாயாரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கட்சி உறுப்பி னர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து விட்டேன் என்று எழுதிக்கொடுத்தால் மட் டுமே தாயாரின் உடலைப் பார்க்க முடியும் என்று கூறியிருக்கின்றனர். இதனை ஏற்க பாப்பா மறுத்துவிட்டார். பக்கத்து சிறையில் வைக்கப்பட்டிருந்த தன் தாயாரின் உடல் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்ட பாப்பா, சத்தமிட்டுக் கதறவில்லை. ஆனால், பின் இரவில் தனியாகத் தான் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கையில் விம்மி விம்மி அழுதிருக்கிறார். அவரது தாயார். தான் இறந்தபின் தன் உடல்மீது செங்கொடி வைத்துப் போர்த்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். தாயாரின் ஆசையை நிறை வேற்ற முடியவில்லையே என்பதில் பாப்பா விற்கு மிகுந்த சோகம். இதனை பாப்பா அடிக்கடி நெகிழ்ச்சியோடு நினைவுகூர்வார். அத்தகு மாபெரும் மனவலிமையை பாப்பா பெற்றிருந்தார்.

கொஞ்சம் கூட சளைக்காமல் அநீதிக்கு எதிராகப் போராடும் உறுதியையும், ஆற்ற லையும் பாப்பா பெற்றிருந்தார். மக்களுடன் எப்போதும் உயிரோட்டமான தொடர்பை கொண்டிருந்ததுதான் இதற்குக் காரணமா கும். அதே நேரத்தில் சுரண்டலால் பாதிக்கப் பட்டவர்களின் தனிப்பட்ட வழக்குகளைக்கூட கூட்டுப்போராட்டமாக மாற்றக்கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டபோது, அந்த சங்கத் தில் விவசாயத் தொழிலாளர்களை சேர்ப்ப தற்காக அவர் பணியாற்றிய காலத்தில் அவர் இந்தத் திறமையை முதன்முதலாக வெளிப்படுத்தினார்.

இந்த காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் கவிஞர் என்று புகழ்பெற்ற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்துடன் சுற்றுப்பய ணம் செய்தார். ஒரே நாளில் 23 கூட்டங் களில் அவர் பேசியிருக்கிறார். இவ்வாறு செயல்படுவதற்கான சக்தியும் ஆர்வமும் ஒரு சிலருக்குத்தான் சாத்தியம். அதில் தோழர் பாப்பாவும் ஒருவர். இதனை அவர் தன் அத்துணை அரசியல் நடவடிக்கைகளி லும் கொண்டுவந்தார். போராட்டம் எங்கே நடை பெற்றாலும் அங்கே தோழர் பாப்பா இருப்பார்.

கோயம்பத்தூரில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தேசிய மாநாடு நடைபெற்றபோது, தயாரிப்புப்பணிகளில் நாங்கள் அனைவரும் ஈடுபட்டிருந்தோம். பாப்பா அப்போது எழுதிக்கொண்டும், ஊழி யர்களுக்குக் கட்டளையிட்டுக்கொண்டும், முழக்கங்களைத் தயார் செய்து கொண்டும், சமைத்துக் கொண்டும் அனைத்தையும் ஒரே சமயத்தில் செய்து கொண்டிருப்பார். எங்களுக்காக மதிய உணவு சமைப்பதில் அவர் மிகவும் குறியாக இருந்தார். கடைசி முறையாக நான் அவரைத் திருச்சியில் பார்த்தேன். அவர் உடல் நலமின்றி இருந்த போதிலும் கான்பூரில் நடைபெறவிருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் பங்கேற்க மிகவும் ஆர் வத்துடன் இருந்தார். ஆனாலும் அது அவ ரால் முடியாமல் போயிற்று. பாப்பா இறக் கும்வரை ஸ்தாபனம் குறித்தும் இயக்கம் குறித்தும்தான் கவலைப்பட்டுக்கொண்டிருந் தார் என்று தோழர் உமாநாத் கூறினார். அவர்களுக்கு இடையே நிலவிய உறவு என் பது அறுபதாண்டுகளுக்கும் மேலா னது. இந்த அறுபதாண்டுகளும் அவர்கள் இருவ ரும் கட்சிக்காக சுயநலமின்றி உழைத்தார்கள்.

தோழர் பாப்பாவின் பணியும் அவர் குறித்த நினைவுகளும் நாட்டின் உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வுக்காகப் போரா டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் என்பது உறுதி.

தமிழில்: ச.வீரமணி

Monday, December 13, 2010

வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின் - செய்திப் படம்

ஹோ சி மின் காட்டிய வழியில் முன்னேறுவோம்

சீத்தாராம் யெச்சூரி

“தோழர் ஹோ சி மின் மற்றும் வியட் நாம் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்டு, முதலில் பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு எதிராகவும் இறுதியாக அமெரிக்காவிற்கு எதிராகவும் நடைபெற்ற காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி சென்ற நூற்றாண்டில் உலக வரலாற்றில் நடைபெற்ற உத்வேகம் அளித்திடும் இயக்கமாகும். சுரண்டலுக்கு எதிராகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒன்று பட்ட மக்கள் முன்னே, துணிந்தவிட்ட மக்கள் முன்னே, எவ்விதமான அடக்கு முறைகளும் தூள் தூள் தூளாகும் என் பதை மெய்ப்பித்த இயக்கமாகும்.

1960களிலும் 70களிலும் வியட்நாம் யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய ஹோ சி மின் என்னைப் போன்று ஏராளமான இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும், பின்னர் கம்யூனிசத் திற்காகவும் எங்களை அர்ப்பணித்துக் கொள்ள ஆதர்சமாக இருந்தார்.

சுமார் 150 ஆண்டுகள் காலனியாதிக் கத்தின் நுகத்தடியில் இருந்த ஒரு நாட் டிலிருந்து வந்தவன் என்ற முறையில், காலனிகளின் சுரண்டல் மற்றும் காலனி எஜமானர்களின் ஒடுக்குமுறைகள் எப் படி இருக்கும் என்பதெல்லாம் நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். சோசலிசத் திற்கான போராட்டத்துடன் காலனியா திக்கப் பிரச்சனைகளையும் சரியாக இணைத்து, காலனியாதிக்கத்திலிருந்த நாடுகளில் விடுதலைக்கான பாதை யைச் சரியாக அமைத்துத்தந்த கம்யூ னிஸ்ட் தலைவர்களின் மத்தியில் தோழர் ஹோ சி மின் முதலாவதாவார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத் தில், மார்க்சியம்-லெனினியம் குறித்து சரி யான புரிதல் இல்லாத சமயத்தில், காலனி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான தத்துவார்த்தத் திசைவழி தெரியாது தோழர் ஹோ சி மின்னும் தத்தளித்துக் கொண்டிருந்தது உண்மை. ஆனால், காலனியாதிக்கம் தொடர்பாக லெனினது ஆய்வுக் குறிப்புகளைப் படித்தபின்னர், இன்ப அதிர்ச்சிக்கு ஆளான தோழர் ஹோ சி மின், ‘‘இதுவே எமக்குத் தேவை, விடுதலைக்கான பாதை இதுவே’’ என்று உரத்துக் கூறினார்.

மார்க்சிய-லெனினியத்தை முழுமை யாகப் புரிந்துகொண்டதன் பின்னணி யில் வியட்நாமின் துல்லியமான நிலை மைகளை லெனினிய அடிப்படையில் ஆய்வு செய்து, காலனி எதிர்ப்புப் போராட் டத்திற்கான போர்த்தந்திரத்தையும் நடை முறை உத்திகளையும் தோழர் ஹோ சி மின் வடித்தெடுத்தார். தோழர் ஹோ சி மின்னின் பாரம்பரியத்தின் மிக முக்கிய அம்சங்களில், இது ஒன்று.

அடுத்த முக்கிய அம்சம், இதனை அடைவதற்காக புரட்சிகரமான கம்யூ னிஸ்ட் கட்சியைக் கட்டியதும், அதன் கீழ் மக்களை முழுமையாக அணிதிரட்டியது மாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த மக்களுக்கு மார்க்சிய-லெனி னியத்தின் அடிப்படைக் கூறுகளை விளக்கியதோடு மட்டுமல்லாமல், புரட் சித் தத்துவத்தின் அடிப்படையில் ஸ்தாப னத்தையும் உருவாக்கினார். கட்சியின் ஒற்றுமைக்கு அவர் மிகுந்த முக்கியத் துவம் கொடுத்தார். மத்தியக்குழுவிலி ருந்து அடிப்படைக் கிளைகள் வரை, கண் ணின் மணி போன்று கட்சியின் ஒற்று மையைக் கட்டிக் காத்திட வேண்டும் என்றார். இம்முயற்சியில் கட்சிக்குள் வந்த வலது, இடது திரிபுகளுக்கு எதி ராகப் போராட கொஞ்சம்கூட தயங்க வில்லை. ஹோ சி மின் வறட்டுத் தத்துவ வாதத்திற்கும் எதிரானவர். அவர் நடை முறை மூலமாகத் தத்துவத்தைச் செழு மைப்படுத்தினார், தத்துவத்தின் மூலமாக நடைமுறையை உருக்குபோன்று மாற் றினார்.

தோழர் ஹோ சி மின்னின் மற்றுமொரு மகத்தான பண்பு அவர் மக்களுடன் கொண்டிருந்த மாபெரும் பிணைப்புதான். தலைவர்கள் உட்பட அனைத்து முன் னணி ஊழியர்களும் மக்களுடன் வாழ வேண்டும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், மக்களுக்காகச் சேவை செய்திட வேண்டும், அவர்கள் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுத்து அவர்களுக்குத் தலைமை தாங்கவேண் டும் என்று அடிக்கடி ஹோ சி மின் கூறு வார். இவ்வாறு அவர் மக்களிடம் வைத்தி ருந்த அபரிமிதமான நம்பிக்கைதான் புரட் சிகரப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் அவருக்கு வெற்றிகளை உத்தரவாதமாக்கின.

ஹோ சி மின் தன் வாழ்நாள் முழுதும் தன் உடலாலும் உள்ளத்தாலும் நாட்டிற் காகவும், புரட்சிக்காகவும், மக்களுக்காக வும் உழைத்தார். ஹோ சி மின் முன்னணி ஊழியர்களின் புரட்சிகர ஒழுக்கத்திற் கும், புரட்சிகர மாண்பிற்கும் அதிக அழுத் தம் கொடுத்தார். “நல்ல நடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் உள்ள முன் னணி ஊழியர்களிடம் மக்கள் மிகுந்த மரியாதையுடனும் நேசத்துடனும் இருப் பார்கள்,” என்று ஹோ சி மின் கூறுவார். அவர் மூன்று எதிரிகளை அடையாளம் காட்டினார். “முதலாளித்துவமும் ஏகாதி பத்தியமும் மிகவும் ஆபத்தான எதிரிகள். ... மூன்றாவது எதிரி, தனிநபர்வாதம் ஆகும். இவர், மேலே குறிப்பிட்ட இரு எதிரிகளின் கூட்டாளியாவார் என்று ஹோ சி மின் கூறினார். “இத்தகைய மூன்று எதிரிகளுக்கும் எதிராக உறுதி யுடன் போராடுவதிலேயே புரட்சிகர நல்லொழுக்கம் அடங்கியிருக்கிறது” என்று தோழர் ஹோ சி மின் கூறினார்.

சமூகத்தை புரட்சிகரமாக மாற்றிய மைக்கும் போராட்டத்தில் தோழர் ஹோ சி மின் கற்றுத்தந்துள்ள புரட்சிகரப் பாரம்பரியங்கள் நமக்கு வழிகாட்டட்டும். “ஒவ்வொருவரும் போர்முனையிலும், பொருளாதார முனையிலும், அரசியல் அல்லது கலாச்சார முனையிலும் போரா ளிகளாக மாற வேண்டும்” என்று ஹோ சி மின் அன்று விடுத்த வேண்டுகோள், ஏகாதிபத்தியத்தின் தாக்குதலின் கீழ் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதேயாகும். நம் முன் உள்ள பணி எளிதானதோ அல்லது மென் மையான மலர்ப்பாதையோ அல்ல என் பது உண்மைதான். தோழர் ஹோ சி மின் சொன்னதுபோன்று, “எதுவும் எளிதானது மல்ல, அதேபோன்று எதுவும் கடின மானதுமல்ல.” இவ்வாறு அவரது தத்து வார்த்த வெளிச்சத்தில் உறுதியான நம் பிக்கையுடன், வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் நம்மை நாம் இணைத்துக்கொள்வோம்.

தமிழில்: ச.வீரமணி

Tuesday, December 7, 2010

மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்

என்னுடைய உரையை மார்க்சியம் பற்றி அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் பற்றி மார்க்சியம் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை மார்க்சியம் பற்றிய தனது கருத்துக்களை அம்பேத்கர் ஆங்காங்கே பேசியிருந்தாலும் “புத்தரா? கார்ல் மார்க்சா?” எனும் நெடுங்கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே அலசியிருக்கிறார்.
மார்க்சியத்தில் இப்போதும் காலப்பொருத்தம் உள்ளவையாக இருப்பவை என்று அவர் நான்கு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று - இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகு பற்றிய பல்வேறு வியாக்யானங்களைத் தந்துள்ளார்கள், செய்ய வேண்டியது என்னவோ உலகை மாற்றுவதுதான்.

இரண்டு - ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே அவற்றின் நலன்களில் முரண்பாடு உள்ளது. அதாவது, வர்க்கப் போராட்டம் நடக்கிறது.

மூன்று - தனியுடைமை யின் காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், இன்னொரு வர்க்கத்துக்கு சுரண்டலினால் வரும் துன்பமும் ஏற்படுகின்றன. 

நான்கு - சமுதாயத்தின் நன்மைக்காக தனியுடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.
இந்த நான்கு கூறுகளை அம்பேத்கர் ஏற்றது என்பது மார்க்சியத்தை ஏற்றதாக அர்த்தமாகும். காரணம், மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் இந்த நான்கும்தான். ஒரு சமூகப் போராளி என்ற முறையில் அவரை இந்த அம்சங்கள் வெகுவாக ஈர்த்திருந்தன. அதிலும் அடிப்படை சமுதாய மாற்றத்தை வேண்டியவர் என்பதால் இவற்றை உற்சாகமாக வரவேற்றார்.
அதே நேரத்தில், மார்க்சியத்தில் காலாவதியாகிப் போன கூறுகள் என்றும் சிலவற்றை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். விசேஷம் என்னவென்றால் அவையெல்லாம் மார்க்சியத்தில் இருப்பதாக அதன் எதிரிகளால் இட்டுக் கட்டப்பட்டவை. அவர்களாகவே இதுவெல்லாம் மார்க்சியத்தின் கூறுகள் எனச் சொல்லிக் கொண்டு, அவர்களாகவே அவற்றை வன்மையாகக் கண்டனம் செய்து கொண்டார்கள். அந்த 1940-50களில் மார்க்சியத்தின் மூல நூல்கள் அனைத்தும் இந்தியாவில் பரவலாகக் கிடைத்ததில்லை. முதலாளித்துவ அறிவு ஜீவிகள் மார்க்சியம் பற்றிச் சொன்னதிலிருந்தே மார்க்சியம் பற்றிய நிர்ணயிப்புக்கு வரவேண்டியிருந்தது அம்பேத்கரால். எனவே அவற்றையும் மார்க்சியக் கூறுகள் என நினைத்துக் கொண்டு, ஆனால் அவற்றின் பொருத்தப்பாடின்மையைக் கச்சிதமாக உணர்ந்து நிராகரித்தார்.
மார்க்சியத்தின் கூறுகள் எனக்கருதி அம்பேத்கர் நிராகரித்தவை மூன்று.

ஒன்று - வரலாற்றுக்கான பொருளாதார விளக்கமே ஒரே விளக்கம். 

இரண்டு - மனித முயற்சியின்றி சோசலிசம் தானாக வந்துவிடும்.

மூன்று - புத்தருக்கும் மார்க்சுக்குமான வேறுபாடு குறிக்கோளில் இல்லை; ஆனால் வழிமுறையில் உண்டு . முன்னது அஹிம்சாபூர்வமானது, பின்னது வன்முறையிலானது.
மார்க்சியத்தை “பொருளாதார நிர்ணயவாதம்” என்று முதலாளித்துவ வாதிகள் பழிசுமத்தி வந்தார்கள். அதாவது, மனிதகுல வரலாற்றைத் தீர்மானிப்பது பொருளாதாரம் மட்டுமே என்று மார்க்சியம் கூறுவதாக இட்டுக்கட்டினார்கள். வரலாற்றை இறுதியாகத் தீர்மானிப் பது வாழ்வின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி என்றுதான் மார்க்சியம் கூறுகிறது. மதம், தத்துவம், சட்டம், கலை, இலக்கியம் போன்ற எத்தனையோ கூறுகளுக்கும் அதில் பங்கு உண்டு என்றது. சொல்லப்போனால் மனிதகுலப் போராட்டத்தின் வடிவத்தை தீர்மானிப்பதில் இந்த மேற்கட்டுக் கோப்பிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்றது. இது பற்றிய விளக்கத்தைத் தரும் எங்கெல்சின் கடிதங்கள் எல்லாம் அம்பேத்கர் காலத்தில் இந்தியாவில் கிடைத்ததா என்பது சந்தேகமே.
மனித முயற்சி இன்றி சோசலிசம் தானாக வந்துவிடும் என்று எங்கே கூறியது மார்க்சியம்? ஒரு கருத்தோட்டம் மனிதர்களைக் கவ்விப்பிடிக்கும் போதே அது பவுதீக சக்தியாகிறது என்று சொன்னார் மார்க்ஸ். புதிய சமுதாயத்திற்கான பிறப்பை பழைய சமுதாயம் தன்னில் கருக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கான மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்க்க வேண்டியது மனிதகுலமே, அதன் போராட்டமே. இதையும் சேர்ந்தே சொன்னார்கள் மார்க்சிய மூலவர்கள். இதைப் புரிந்து கொண்டிருந்ததால்தான் போல்ஷ்விக் கட்சியை உருவாக்கி, புரட்சியை நடத்திக் காட்டினார் லெனின். இது மனித முயற்சியின்றி வேறென்ன?
மார்க்சியம் வன்முறையை மட்டுமே வலியுறுத்துகிறது என்று விடாமல் சொல்லி வருகிறார்கள். மார்க்ஸ் லண்டனில் வந்து தங்கிய பிறகு, அங்கு எழுந்து வந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் கண்டபிறகு சோசலிசத்துக்கான மாற்றம் இங்கிலாந்தில் அமைதி வழியில் நடக்கக்கூடும் என்று கூறினார். அவர் எந்தவொரு சாத்தியப்பாட்டையும் நிராகரிக்கவில்லை. அவருக்கு குறிக்கோளே முக்கியம். அதற்கான வழிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும் என்பதை உணர்ந்திருந்தார் அந்த மாமேதை. மார்க்சியத்தை வன்முறையோடு முடிச்சுப்போடுவது அதன் எதிராளிகளின் திட்டமிட்ட திருகல் வேலையாகும்.
ஆக, யோசித்துப் பார்த்தால் அம்பேத்கர் நிராகரித்தவை எல்லாம் மார்க்சியம் என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட மார்க்சியமல்லாத கூறுகளே. அவற்றை அவர் நிராகரித்ததில் நமக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நமக்கு முக்கியம் அவர் ஏற்றுக் கொண்டிருந்த அந்த நான்கு கூறுகள். அவையே மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்கள். அவற்றை அவர் ஒப்புக் கொண்டிருந்தது அவர் மார்க்சியத்தோடு எவ்வளவு நெருங்கி இருந்தார் என்பதைக் காட்டுகிறது. இதற்காக அவரை நாம் போற்றுகிறோம், புகழ்கிறோம்.
இத்தகைய மார்க்சியத்தை “ஐரோப்பியத் தயாரிப்பு” என்றும், “இறக்குமதியான சரக்கு” என்றும் இப்பொழுதும் சிலர் பேசுகிறார்கள். ஒவ்வொரு மனிதனிடமும் மனிதகுலத்தின் பொதுத்தன்மையும் உள்ளது. அவன் பிறந்த பகுதியின் தனித்தன்மைகளும் உள்ளன. பொதுத்தன்மை பற்றிய தனது கருத்தோட்டத்தைத் தருகிற மார்க்சியம் தனித்தன்மைகள் பற்றி பேசக்கூடாது என்று கூறுவதில்லை. இரண்டையும் சேர்த்தே பேசச் சொல்கிறது. ஐரோப்பாவிலிருந்து வந்த ரயிலிலும், பேருந்திலும் ஏற மறுக்காதவர்கள் அங்கிருந்து வந்த மார்க்சியத்தை மட்டும் புறந்தள்ளும் வினோதம் நடக்கிறது. அவர்கள் என்ன பேசினாலும் உண்மையானது சகலத்தையும் மீறித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.
இந்தப் பின்புலத்தில் அம்பேத்கரை மார்க்சியவாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற விஷயத்திற்கு வருவோம். சாதி பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகளை மார்க்சியவாதிகள் உற்சாகமாக வரவேற்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள். 1916லேயே சாதிகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை அவர் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் சமர்ப்பித்தார். சாதியின் அடிப்படையான இயல்பு அகமணம் - அந்தக் குறிப்பிட்ட குழுவுக்குள் மட்டுமே திருமணம் புரிவது என்பதைச் சுட்டிக் காட்டினார். தனக்குத்தானே விதித்துக் கொள்கிற இந்தக் கட்டுப்பாடு பெண்ணடிமைத்தனத்திற்கு இட்டுச் சென்றது என்கிற ஒரு புதிய கோணத்தைத் தந்தார்.
யுத்தம், வேட்டை போன்ற காரணங்களால் ஆண்கள் இளம் வயதிலேயே இறக்கும்போது ஒரு சாதிக்குள் பெண்கள் தொகை பெருகி, ஆண்கள் தொகை குறைந்துவிடுகிறது. பெண்களைச் சாதிவிட்டுத் திருமணம் செய்து கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும். கறாரான அகமண முறை அதற்கு இடம் கொடுக்காத நிலையில் பலதார மணம், உடன்கட்டை ஏற்றல், கட்டாய விதவைத்தனம் போன்றவற்றில் பெண்களைத் தள்ளிக் கொடுமைப்படுத்தினார்கள் என்றார் அம்பேத்கர். இத்தகைய ஆய்வுகள் மார்க்சியர்களை ஈர்க்கின்றன. சாதியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் இடையிலான தொடர்பு புரிகிறது.
ஜாத்-பட்-தோடக் மண்டல் என்கிற அமைப்பில் ஆற்றுவதற்கு அம்பேத்கர் தயாரித்திருந்த உரை “சாதி ஒழிப்பு” எனும் பெயரில் 1936ல் நூலாக வெளி வந்தது. சாதியின் இயல்பு அகமணம் என்பதால், சாதி ஒழிப்புக்கான வழி அந்த அகமணம் மறுப்பு என்றார் அதில். அத்தகைய சாதி மறுப்பு மணத்திற்கு மனத்தடை ஒரு பிரதான காரணம் என்றும், அதை உருவாக்கியதில் இந்து மதத்திற்குத் தீவிரப் பங்கு உண்டு என்றும் கூறினார்.
இந்துமதம் பற்றிய அம்பேத்கரின் ஆய்வுகள் மிகப் பிரமாதமானவை. அந்த மதத்திலே தத்துவ விசாரணையைவிட சடங்குகள் அதிகம். அது ஏவல்கள் மற்றும் தடைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாக உள்ளது. ஒவ்வொரு சாதியாரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது எனும் கட்டளைகளைக் கொண்டதாக உள்ளது. அத்தகைய தர்மசாஸ்திரங்களின் அஸ்திவாரத்தில் அந்த மதம் நிற்கிறது. அத்தகைய மதத்தை எதிர்க்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்று கூறினார்.
இத்தகைய சாதி மறுப்பு இயக்கத்தின் தேவையை வற்புறுத் தும்போதுதான் அவர் சாதி ஒழிப்புக்கு அன்றைய சோசலிஸ்டுகள் கூறிய தீர்வை கேள்விக்கு உட்படுத்தினார். அவர்கள் சோசலிச சமுதாயத்தில் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார்கள். அம்பேத்கரோ சோசலிச சமுதாயம் அமைப்பதற்கான போராட்டத்தில் சகல உழைப்பாளி மக்களையும் ஒன்று திரட்டவே சாதி மறுப்பு இயக்கம் தேவை என்றார். அதாவது சாதி மறுப்பானது சோசலிசத்தின் பின்விளைவாக மட்டுமல்லாது, அதன் ஒரு காரணியாகவும் இருக்கிறது என்றார்.
இதற்கு அவர் இரண்டு விசயங்களை நினைவுபடுத்தினார். ஒன்று, உழைப் பாளர்கள் மத்தியிலே வர்க்க உணர்வோடு சாதி உணர்வும் இருக்கிறது என்பது. இரண்டு, தொழிற்சாலையிலும் நிர்வாகம் சாதி வேறுபாடு காட்டுகிறது என்பது. உதாரணமாக, ரயில்வேயில் சுமைதூக்கிகளாகக்கூட அந்தக் காலத்தில் தாழ்த்தப் பட்டோர் சேர்க்கப்பட்டதில்லை. காரணம் அவர்களையே ரயில்வே அதிகாரிகள் தங்கள் வீட்டுவேலைகளுக்கும் பயன்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்டோரை நியமித்தால் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்த முடியாதல்லவா? அதனால்தான் 1938ல் ரயில்வேத் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது அவர்களின் எதிரிகள் பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவம் என்றார் அம்பேத்கர்.
இதிலே எல்லாம் மார்க்சியர்களுக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. சொல்லப்போனால் 1930களில் “குடி அரசு”, “பகுத்தறிவு” போன்ற பெரியாரின் சுயமரியாதை இயக்க ஏடுகளில் இத்தகைய கருத்துக்களை எழுதி வந்தார் கம்யூனிஸ்டு சிங்காரவேலர். பார்ப்பனியம் - முதலாளித்துவம் இரண்டையும் எதிர்த்துச் சண்டமாருதம் செய்தவர் அந்தக் கம்யூனிஸ்டு தலைவர்.
ஆனால் கம்யூனிஸ்டுகள் வேறு சில உண்மைகளையும் சேர்த்துப் பார்த்தார்கள். முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக ஏகாதிபத்தியம் எழுந்திருந்தது. அன்று அது இந்தியாவில் நேரடி ஆட்சியில் இருந்தது, நம்மை அடக்கி ஆண்டு வந்தது. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளைக் காட்டிலும் மிகக் கோரமான எதிரிகளாக நாஜிசவாதிகளும் பாசிசவாதிகளும் கிளம்பிய போது அவர்களை எதிர்த்தும் கம்யூனிஸ்ட்டுகள் போராடினார்கள். அம்பேத்கரும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வட்டமேஜை மாநாட்டில் பேசினார். நாஜிசம் - பாசிசத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார் என்பது உண்மை.
ஆனால் 1942-1946 காலத்தில் அவர் பிரிட்டிஷ் மந்திரி சபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஒரு சமூகப் போராளி மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றார், தொழிலாளர்களுக்கு ஆதரவான சில சட்டங்களைக் கொண்டு வந்தார் என்பது அதில் சாதகமான அம்சம். அதுவே தொழிற்சங்கங்களுக்கும் அவருக்கும் இடையில் சில உரசல்களைக் கொண்டு வந்தது என்பது பாதகமான அம்சம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரதிநிதியாய் பேச வேண்டிய நிலையில் அம்பேத்கர் இருத்தப்பட்டார். 1945-46ல் நடைபெற்ற தேர்தல்களில் அவரது “பட்டியல் சாதியினர் சம்மேளனம்” கட்சி தோற்றதற்கு- ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு வீறு கொண்டெழுந்திருந்த அந்தக் காலத்தில் அவரது கட்சி தோற்றதற்கு - இதுவும் ஒரு காரணமாகும். சாதி எதிர்ப்பு இயக்கத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டும் என்பதே இதில் கிடைத்த பாடமாகும்.
சுதந்திர இந்தியாவின் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் பிரமாதமான பங்களிப்பைச் செய்தார். இதை மூடிமறைத்து “பொய் தெய்வங்களைக் கும்பிடுவது” என்றொரு நூல் எழுதியிருக்கிறார் ஆர். எஸ். எஸ். பரிவாரத்தைச் சேர்ந்த அருண்ஷோரி. அந்தக் கேவலமான நூலுக்கு தமிழகத்தின் அம்பேத்கரிஸ்டுகள் சரியான பதிலடி தராதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பதில் காட்டுகிற ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது இந்ததுத்துவாவாதிகள் எதிர்ப்பில் அவர்கள் காட்டினால் நல்லது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அம்பேத்கர் தந்த கடும் உழைப்பை அரசியல் நிர்ணயசபை உறுப்பினராகிய டி. டி. கிருஷ்ணமாச்சாரி அங்கேயே பாராட்டிப் பேசினார். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் அம்பேத்கரைத் தவிர்த்து இன்னும் ஆறுபேர் இருந்தார்கள். அவர்களால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்கிற விபரத்தை எல்லாம் தந்த டி. டி. கே. “இறுதியில் அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் சுமை டாக்டர் அம்பேத்கரின் மீது விழுந்தது. ஐயத்திற்கிடமற்ற முறையில், மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் இந்தக் கடமையைச் சாதித்ததற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்” என்றார். இப்படிப்பட்டதொரு மகத்தான பணியைத்தான் மிகவும் சிறுமைப்படுத்தி எழுதியிருக்கிறார் அருண்ஷோரி.
ஷோரியின் ஆத்திரத்திற்கு காரணம் உண்டு. அரசியல் நிர்ணய சபையில் பார்ப்பனியத்தின் குரல் வன்மையாக ஒலித்தது. அதை எதிர்த்து வலிமையாகப் போராடி, முடிந்த அளவு வெற்றி பெற்றார் அம்பேத்கர். உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக கிராமப் பஞ்சாயத்து முறை இருக்க வேண்டும் என்றார்கள் பழமைவாதிகள். இதை அம்பேத்கர் ஏற்கவில்லை.
வரைவு அரசியலமைப்புச் சட்டத்தை முன்மொழிந்து அவர் பேசிய பேச்சு அபாரமானது. அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்த நாட்டுக்குள் வந்த போதெல்லாம் வேடிக்கை பார்த்தன இந்தக்கிராம சமூகங்கள் என்பதை நினைவுபடுத்தினார். “உள்ளூர்வாத சாக்கடைத் தொட்டியாகவும், அறியாமை நிறைந்த இருள் குகையாகவும், குறுகிய மனப்பான்மை மற்றும் சாதி ஆதிக்கத்தின் பிறப்பிடமாகவும் உள்ளது தானே கிராமம்? வரைவு அரசியலமைப்புச் சட்டமானது கிராமத்தை ஒதுக்கிவிட்டு தனிமனிதனைத் தனது அடிப்படை அலகாக வைத்துக் கொண்டுள்ளது பற்றி எனக்கு மகிழ்ச்சியே” என்று பளிச்சென்று கூறினார் அவர். இந்திய கிராமங்கள் பற்றி மாமேதை மார்க்ஸ் எழுதியதன் சாடை இதில் தெளிவாக வெளிப்பட்டது.
குடியரசுக் கோட்பாட்டை முடிந்த அளவு நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்ததில் அம்பேத்கருக்கு ஒரு தனித்த பங்கு உண்டு. ஆனால், இந்திய அரசு முழுமையான குடியரசு அல்ல என்பதை நாம் அனுபவத்தில் கண்டுவிட்டோம். அதை முழுமை யானதாக ஆக்குவதற்கு முதலாளித்துவத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டம் அவசியம். காங்கிரஸ் மந்திரி சபையில் அம்பேத்கர் அங்கம் வகித்தது, அதற்கானதொரு போராட்டத்தை அரசியல் நிர்ணயசபையில் அவர் நடத்த உதவியது என்பது உண்மை. மறுபுறத்தில் அவர் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரதிநிதியாகப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருத்தப்பட்டார் என்பதும் உண்மை. இதுவும் அவருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான உரசலை உருவாக்கியது.
மறுபுறத்தில் அம்பேத்கரால் காங்கிரஸ் மந்திரி சபையில் தொடர்ந்து இருக்கவும் முடியவில்லை. மாதர் விடுதலையை மனதில் கொண்டு அவர் தயாரித்த இந்து சட்டத்திருத்த மசோதாவை இந்து மகாசபையினர் மட்டுமல்ல, காங்கிரசிலிருந்த பழமைவாதிகளும் ஆதரிக்கவில்லை. இதனால் வெறுத்துப்போன அம்பேத்கர் 1951ல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பெண்ணியம் குறித்த அம்பேத்கரின் சிந்தனைகள் போற்றத்தக்கவை, அவையும் தனித்து ஆராயப்பட வேண்டும்.
இப்படி காங்கிரசோடும் தொடர்ந்து போக முடியாமல், அரசியலமைப்புச் சட்ட ஆக்கப்பணியில் மூழ்கி சொந்தக் கட்சியையும் வளர்க்க முடியாமல் போன நிலையில் 1952 பொதுத் தேர்தல் வந்தது. இவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை யில், வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் நடந்த முதல் தேர்தல். பம்பாய் தொகுதி ஒன்றிலிருந்து மக்களவைக்கு போட்டியிட்ட அம்பேத்கர் அநியாயமாகத் தோற்றுப்போனார், அதிகம் அறியப்படாத ஒரு வெண்ணெய் வியாபாரி வெற்றி பெற்றார். இது தரும் பாடம் என்ன? சாதி எதிர்ப்பு இயக்கம் என்பதை முதலாளித்துவத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தோடு இணைந்தே நடத்த வேண்டும் என்பது. இல்லையென்றால் மகத்தான சமூகப் போராளிகளையும் தேர்தல் அரசியல் ஓரங்கட்டிவிடும்.
அம்பேத்கரியவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்கும் இடையே முரண்பாடு ஏதுமில்லை; இருப்ப தெல்லாம் சில வேறுபாடுகளே. தனியுடைமைச் சமுதாயம் ஒழிய வேண்டும், சாதியச் சமூகம் ஒழிய வேண்டும் என்பதில் இரு சாராருக்கும் ஒருமித்த கருத்து இருக்கிறது. வேறுபாடு, அதை எப்படி அடைவது என்பதில்தான். சாதி எதிர்ப்பு இயக்கம் மட்டுமே போதும் என்கிறார்கள் அம்பேத்கரியவாதிகள். அதை ஏகாதிபத்திய - நிலப் பிரபுத்துவ - முதலாளித்துவ எதிர்ப்பு வர்க்கப் போரோடு இணைத்து நடத்த வேண்டும் என்கிறார்கள் மார்க்சிய வாதிகள். இதுவே காலப்பொருத்தப்பாடு உடைய நிலைபாடு.
ஒரு காலத்தில் வருணமே வர்க்கமாக இருந்தது. இப்போதோ வருணமும் இருக்கிறது. அதிலி ருந்து பிறந்த வர்க்கமும் இருக்கிறது. அதிலும் வர்க்கப் பிரிவினையே வளரும் உண்மையாக இருக்கிறது. ஆகவேதான் வருண எதிர்ப்பையும் வர்க்கப்போரையும் இணைத்து நடத்த வேண்டும் என்கிறார்கள்.
இதை அம்பேத்கரியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறோம். அவரவர் மற்றவர் நிலை பாட்டைப் புரிந்து கொள்வது அவசியம். காரணம் இரு சாராரும் இணைந்து போராட வேண்டிய காலமிது. வேறுபாடுகளைப் பெரிதுபடுத்துவதைவிட பொது உடன்பாடுள்ள விஷயங்களில் இரு சாராரும் ஒன்று பட்டுப் போராட வேண்டும். இதற்கு மார்க்சியவாதிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
இந்தப் பார்வையிலிருந்துதான் அம்பேத்கரிட மிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்கிறார்கள். அவர் நடத்திய சவுதார்குளம் நீர் எடுக்கும் போராட்டம், நாசிக் காளாராம் கோவில் நுழைவுப் போராட்டம் போன்றவை இப்போதும் நமக்கெல்லாம் உத்வேகம் தருபவை.
பிற்காலத்தில் இத்தகைய போராட்டங்களை அம்பேத்கர் நடத்தவில்லை என்றாலும் அதற்கான அவசியம் என்னவோ இருந்தது. அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தாலும் பூரிஜெகன்னாதர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பக்கத்துவீட்டு மொட்டை மாடியிலிருந்துதான் கோவிலை எட்டிப் பார்த்தார். இது சுயமரியாதைப் பிரச்சனை. இதுபோன்ற தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனைகளை அவசியம் கையில் எடுக்க வேண்டும். நிலப்பிரச்சனை, வீட்டுமனைப் பிரச்சனை,வறுமை ஒழிப்பு பிரச்சனை, பொருளாதார ரீதியாக தலித்துகள் சொந்தக்காலில் நிற்கும் பிரச்சனை என்பவற்றை பிரதானமாக எடுக்க வேண்டும். இதற்கு ஒரு விரிந்த அணிவகுப்பை உருவாக்க வேண்டும்.
பார்ப்பனியம் பற்றி அம்பேத்கர் எழுதியுள்ள படைப்புகள் பலவற்றையும் நாம் படிக்க வேண்டும். அதே நேரத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு வேறு, பார்ப்பனர் எதிர்ப்பு வேறு என்று அவர் கச்சிதமாக வேறுபடுத்தியிருப் பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சவுதார்குளம் போராட்டத்தின்போது அது நடந்தது. தங்களது ஆதரவு வேண்டும் என்றால் பார்ப்பனர்களை அதில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றார்கள் பார்ப்பனரல்லாத தலைவர்கள். அப்போது அம்பேத்கர் கூறினார் - பார்ப்பனியச் சிந்தனையோடு வரும் பார்ப்பனரல்லாத வரை நிராகரிப்பேன், பார்ப்பனியச் சிந்தனை இல்லாத பார்ப்பனரை வரவேற்பேன். பார்ப்பனியத்தை ஒரு சமூகக் கட்டமைப்பாக அவர் கண்டார். வெறும் ஒற்றை சாதிப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. அந்த நோக்கையே மார்க்சியர்களும் கொண்டிருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றால், ஒடுக்குபவரிடம் பிளவை ஏற்படுத்த வேண்டும். கோட்டைக்குள்ளே குத்துவெட்டு நடக்கட்டும். ஒடுக்கப்பட்டோரை எத்தனை பிரிவுகளாகப் பிளந்தார்கள். நாம் ஒடுக்குபவரிடையே ஒரேயொரு பிளவைத்தான் விரும்புகிறோம். அதுதான் முற்போக்கு, பிற்போக்கு எனும் பிளவு. பிறந்த உயர்சாதிக்குத் “துரோகம்” செய்கிறவர் களையும் சமூகநீதி அணிவகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சற்றே யோசித்தால் அது உழைக்கும் வர்க்க அணிவகுப்பாக இருப்பதைக் காணுவீர்கள். இப்படியாக சமூகநீதிப் போராட்டமும் வர்க்கப் போரும் ஒரே புள்ளியில் குவிவதையும் உணருவீர்கள். அத்தகைய அணிவகுப்பு வென்றே தீரும்.


அருணன்
(நெல்லையில் நடைபெற்ற அம்பேத்கர் சிந்தனைகள்- ஆய்வரங்கில் ஆற்றிய உரை.)

Monday, December 6, 2010

புதுச்சேரி சிபிஎம் மூத்த தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி மறைந்தார்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தோழரும் புதுச்சேரி பிரதேசக் குழு தோழருமான பி.ராமமூர்த்தி(79) காலமானார். 

தோழர் பி.ராமமூர்த்தி 1955ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலையில் பணிபுரிந்த அவர், பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் கட்சியிலும், விவசாய அரங்கத்திலும் அரும்பணியாற்றினார். 1957ம்ஆண்டு ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல் மாநில அரசு கொண்டுவந்த பாதகமான நிலச்சீர்திருத்த சட்டத்தை எதிர்த்து தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி ஐந்து மாத காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறையில் தன்னுடன் இருந்த சில தலித் தோழர்களுக்கு சிறையிலிருந்து விடுதலையான பின்னர் பாராட்டுவிழா நடத்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதால் சாதி விலக்கம் செய்யப்பட்டார். அதன் விளைவாக அவரது சகோதரி திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.

புதுச்சேரி பிரதேசத்தில் 1974லிருந்து தீக்கதிர், செம்மலர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, சிந்தா, தேசாபிமானி போன்ற பத்திரிகைகளின் விற்பனை பொறுப்பை ஏற்று தனது கடைசிகாலம் வரை அதனை சிறப்புறச் செய்து வந்தார். தோழர் பி.ராமமூர்த்தி திருமணம் செய்துகொள்ளவில்லை. தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் தனக்கு கிடைத்த கணிசமான நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி பிரதேச குழுவிற்கும் விழுப்புரம் மாவட்டக்குழுவிற்கும் வழங்கியுள்ளார்.

ஒன்றுபட்ட தென்னாற்க்காடு மாவட்டத்திலும், பின்னர் புதுச்சேரி பிரதேசத்திலும் கட்சி வளர்ச்சிக்காக அர்ப்பணிபோடு செயல்பட்டவர் தோழர் பி.ராமமூர்த்தி. அவரது மறைவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.

சிபிஎம் புதுச்சேரி பிரதேசக் குழு அலுவலகத்திலேயே தங்கி கட் சிப்பணியை ஆற்றி வந்த தோழர் பி. ராமமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை பிற் பகல் 2 மணி அளவில் உடல் குன்றி காணப்பட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

அதனையடுத்து கட்சியின் பிரதேசக்குழு அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்திற்கு அவ ரது உடல் கொண்டுவரப்பட்டது.

செங்கொடி போர்த்தப்பட்ட அவரது உடலுக்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வி. பெருமாள், செயற் குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், நிலவழகன், முருகன், உலகநாதன், ராமசாமி மற்றும் பிரதேசக்குழு உறுப்பினர் கள் பிரபுராஜ், சங்கர், தமிழ்ச்செல் வன், கொளஞ்சியப்பன், லெனின் துரை, செயலாளர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மறைந்த பி. ராமமூர்த்தி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பி. ராமமூர்த்தி மறைவை யொட்டி, கட்சியின் கொடி அரைக் கம்பத்தில் மூன்று தினங்களுக்கு பறக்கவிடப்படும். மேலும் கட்சி யின் அனைத்து நிகழ்ச்சிகளும் மற் றும் வர்க்க வெகுஜன இயக்கங் களின் நிகழ்ச்சிகளும் 3 நாட் களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று பிரதேச செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.