1960களின் இறுதியில் சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்திக் காண்பித்து, பொய்யான வருகைப் பதிவேட்டினை தயார் செய்து, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்த வகையில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு மஸ்டர் ரோல் ஊழல் எனப் பெயர். இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு, அன்றைக்கு மாநகராட்சியின் கவுன்சிலர்களாக இருந்த கம்யூனிஸ்ட்டுகளைத் தவிர, திமுக, காங்கிரஸ் என அனைவரும் உடந்தை. 1996 இல் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் ஹவாலா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும, கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே அந்தப்பட்டியலில் இடம்பெறவில்லை.
1988ஆம் ஆண்டு தினமணி நாளேடு “அதிசயம் ஆனால் உண்மை’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது. திரிபுரா முதல்வராக 10 ஆண்டுகாலம் பதவியில் இருந்த நிருபன் சக்கரவர்த்தி குறித்த செய்தி அது “தேர்தல் தோல்வி காரணமாக அரசு வீட்டை காலி செய்கிற போது, இரண்டு பெட்டிகளுடன் சைக்கிள் ரிக்ஷாவில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நோக்கி நிருபன் சென்றார். ஒரு பெட்டியில் அவருடைய உடுப்புகளும், மற்றொரு பெட்டியில், புத்தகங்களும் இருந்தது. வேறு உடைமைகள் எதையும் கொண்டிருக்க வில்லை’’ என குறிப்பிட்டு இருந்தது.